கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில், ஒரு சமுதாய மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வந்தார்கள். அங்கு கடலில் உள்ள  ஒரு சிறு நிலப் பகுதியில்  (Foreshore) அப்படி பிடித்த மீன்களை காய வைப்பதும், குவித்து வைப்பதும், கனோ (Canoe) என்னும் சிறு படகையும், பெரும் படகையும் (boat) அங்கு நிறுத்தி வைப்பதும், மீன் பிடி வலைகளை காய வைப்பதும் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அதை அந்த நிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனை செய்தார்கள். எனவே அதை எதிர்த்து 1920-ல் இராமநாதபுரம் சப் கோர்ட்டில் சிவில் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் 1930-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு (Compromise Decree ) அதை ஒட்டி கோர்ட் டிகிரி கொடுத்தது. இந்த சமாதான டிகிரியில், அவர்கள் 21 வருடங்களுக்கு தொடர்ந்து மீன் பிடிக்கவும், அந்த நிலத்தை குத்தகையாக வைத்துக் கொள்ளவும், அதற்காக வருடம் ரூ.7500 கொடுக்க வேண்டும் என்றும், 21 வருட முடிவில் அந்த கடலில் உள்ள நிலப் பகுதியை (Foreshore) திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்றும், முடிவு செய்து அதை ஒட்டி கோர்ட் சமாதான டிகிரியாக தீர்ப்புக் கொடுத்தது. 

இந்த வழக்கில் அவர்கள் கேட்டது அந்த நிலத்தை உபயோகப்படுத்த உரிமை கோரினர். ஆனால் சமாதான டிகிரியில், வழக்குக்குச் சம்பந்தமில்லாமல், அந்த நிலப்பகுதியை குத்தகை உரிமை கேட்டு, அதற்கு ஒப்புக் கொண்டு, அந்த டிகிரியை வாங்கி உள்ளார்கள்.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து, தொடர்ந்து அந்த ஒப்புக்கொண்ட குத்தகைத் தொகையைக் கொடுக்கவில்லை என்பதால், அவர்கள் மீது சமாதான கோர்ட் டிகிரியை வைத்து வழக்குப் போட்டார்கள். ஆனால், அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், இந்த கோர்ட் சமாதான டிகிரியை (தீர்ப்பை) பத்திரமாக பதிவு செய்யாததால் அதைக் கொண்டு வழக்குப் போட முடியாது என்று வாதம் செய்தார்கள். 

சொத்துரிமைச் சட்டம் 1882

பொதுவாக சொத்துக்களை விற்பனை, மற்றும் பரிமாற்றம் செய்யும் போது, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொத்துரிமைச் சட்டம் 1882-ல் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது.

அதன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் எவை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது:

  1. Sec.17(1)(a) சொத்தின் தானப் பத்திரம். (Gift deed)
  2. Sec.17(1)(b) சொத்தின் உரிமைகளை மாற்றும் பத்திரம் (கிரயம், அடமானம், போன்றவைகள்). (Sale deed, Mortgage deed etc)
  3. Sec.17(1)(c) சொத்தின் உரிமைகளை மாற்றிக் கொடுத்த பத்திரத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை பெறும் போது எழுதிக் கொள்ளும் பத்திரம். (Receipt of money acknowledged in respect of immovable property).
  4. Sec.17(1)(d) சொத்தின் குத்தகைப் பத்திரம். (Lease deeds).
  5. Sec.17(1)(e) சொத்தின் பேரில் வாங்கிய டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைமெண்ட் பத்திரம் (Assignment deed of Court decree regarding immovable property).

மேலும், மேற்சொன்னவற்றுக்கு விதிவிலக்காக எந்த எந்த பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது. அவை:

அதில் எல்லாக் கோர்ட் டிகிரிகைளையும் (சொத்து சம்மந்தபட்ட டிகிரி உட்பட) கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ளது. 

ஆனாலும் அதிலும் ஒரு விதிவிலக்காக, அந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை கோர்ட் கொடுத்தாலும், அல்லது பார்ட்டிகளின் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால், அப்படிப்பட்ட டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்தின் டிகிரி – பதிவு அவசியம் இல்லை:

அதாவது, வழக்கில் சம்மந்தபட்ட சொத்தாக இருந்தால், அப்படிப்பட்ட டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பத்திரமாக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது.

வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தின் டிகிரி – பதிவு அவசியம்:

ஆனால், வழக்கில் சம்பந்தமில்லாத ஒரு சொத்தை, அந்த வழக்கில் ஒரு டிகிரியாக (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால், அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளது. 

எனவே இந்த வழக்கில், மீனவர்கள் பெற்ற சமாதான டிகிரி என்பது வழக்குச் சொத்து (கடலுக்குள் இருக்கும் ஒரு நிலப்பகுதி -Foreshore) பற்றியே உள்ளது. எனவே அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று வழக்குப் போட்டவர்களின் வாதம்.

ஆனால், இந்த விதிவிலக்கு என்பது, பிரிவு 17(1)(b) & 17(1)(c) வகை சொத்து மாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி உள்ளது. அப்படிப் பார்த்தால், குத்தகை உரிமை (Lease) என்பது பிரிவு 17(1)(d)-ல்வருகிறது. அதற்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சொத்து மாற்றுச் சட்டம் 1882-ஐ, 1929-ல் திருத்தம் செய்து திருத்தல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதன்படியும், இந்த பிரிவு 17(1)(d)-ஐ (Lease) அந்த விதிவிலக்குக்குள் கொண்டு வரவில்லை.

எனவே, முடிவாக:

வழக்கில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட), அதை பத்திரமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெள்ளத் தெளிவாகிறது.

ஆனால், அந்த வழக்கில் சம்மந்தமில்லாத சொத்தைப் பொறுத்து அந்த வழக்கில் ஒரு டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட), அதை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிவிலக்கில் சொல்லி உள்ளது.

ஆனாலும், அப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத சொத்து என்பது பிரிவு 17(b) & 17(c) க்கு மட்டுமே பொருந்தும். குத்தகை சம்மந்தப்பட்ட டிகிரி வழக்கின் சொத்துக்கு சம்மந்தப்படாத சொத்தாக இருந்தாலும், அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. 

பிரைவி கவுன்சில் வழக்கான Hemanta Kumari Debi vs Midnapore Zamindari Co, AIR 1919 PC 79 என்ற வழக்கில் தீர்ப்பாக, பிரிவு 17(1)(b) & (c) இவைகளுக்கு மட்டுமே என்று சொல்லியுள்ளதால், குத்தகை என்பது இதில் வராது என்பதால், அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே தீர்ப்பு கூறியுள்ளது.

A lease is, of course, a non-testamentary instrument which operates to create a right in immovable property; but inasmuch as leases are dealt with separately in a later clause the rules of construction of statutes preclude the respondent calling in aid Clause (b).

எனவே இந்த வழக்கில் அந்த சமாதான டிகிரி, குத்தகை சம்மந்தப்பட்டு இருப்பதால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.

E.S.Kasim Marakkayar and others vs P.R.M.K.Muhammad Abdul Rahiman, dated 25 January 1944, AIR 1944 Mad 273.

**

வக்ப் பொதுக் கொடை எது

வக்ப் பொதுக் கொடை எது

மிர்சா முகமத் அலி நமாசி (ஷியா முகமதிய பிரிவைச் சேர்ந்தவர்) என்பவர் 1930-ல் தனது சொத்துக்களைப் பொறுத்து ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கிறார். அதில் கீழ்கண்ட தான, தருமங்களைச் செய்யும்படி சொல்லியுள்ளார்.

  1. வசதியில்லாத தனது உறவினர்களுக்கு உதவவும், (30%)
  2. மொகரம் பண்டிகை, மற்றும் ஷியா முஸ்லீம்களின் மற்ற பண்டிகைகளைக் கொண்டாடவும், (வருமானத்தில் 10%).
  3. வசதியில்லாத ஷியா முகமதியர்களின் திருமணத்தை நடத்தவும், வசதியில்லாத முகமதியர்களின் இறப்புச் செலவுகளைச் செய்யவும், 
  4. செய்யது என்ற முஸ்லீம் சமுதாயத்துக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும், (20% மேற்கண்ட இரண்டுக்கும் சேர்த்து).
  5. ஷியா பிரிவைச் சேர்ந்த முகமதியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும், அதை ஒட்டிய தான தர்மங்களைச் செய்யவும், அந்த செட்டில்மெண்டில் சொல்லியுள்ளார்.

இந்த செட்டில்மெண்டை வக்ப் என்னும் தர்மமாக எழுதி வைத்துள்ளார். அதற்கு முத்தாவலி என்ற நிர்வாகியை நியமித்துள்ளார். அந்த முத்தாவலி, இந்த தர்மங்களை செய்யவும், இதில் குறிப்பிட்டுள்ள சதவிகிதத்தை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அதிகாரமும் கொடுத்துள்ளார். 

மற்றவைகளை தருமம் என்று ஏற்கலாம் என்றும், ஆனால், தனது வசதியில்லாத உறவினர்களுக்கு உதவி செய்வதை தர்மம் என்று ஏற்க முடியாது என்று வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏனென்றால் அது பொதுவான ஒரு சமுதாயக் கூட்டம் என்று கருத முடியாது. (பொதுமக்கள், ஒரு சமுதாயம், சாதி, ஒரு மதம்,போன்றவைகளை ஒரு பொதுமக்களாக ஏற்கலாம். ஆனால், தன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை ஒரு சமுதாயக் கூட்டம் என்று ஏற்க முடியாது என்றும் அது தனி நபருக்கு செய்யும் உதவி என்பது வருமான வரித்துறையின் வாதம்).

Lord Parker of Waddington said: “A trust to be valid must be for the benefit of individuals, which this is certainly not, or must be in that class of gives for the benefit of the public which the Court in this County recognize as charitable in the legal as opposed to the popular sense of that term.  Moreover, if a trustee is given a discretion to apply trust property for purposes some of which are and some are not charitable, the trust is void for uncertainty.”

லார்டு பார்க்கரின் கூற்றுப்படி பார்த்தால், இந்த தானத்தில், முத்தாவலி இஷ்டம்போல தானத்தை மாற்ற முடியும் என்றும், அதிலும் குறிப்பாக, வக்ப் ஏற்படுத்தியவரின் ஏழை உறவினர்களுக்கு கொடுத்திருப்பதால், அது தர்ம காரியமாக ஏற்க முடியாது என்பதால், இந்த வக்ப் என்னும் பொதுக் கொடையே சட்டப்படி செல்லாது என்று ஆகிறது.

இந்தியாவில் இதன் நிலை:

ஏழை உறவினர்களுக்கு கொடுத்த அல்லது எழுதி வைத்த வக்ப் என்னும் பொதுக் கொடையை பொது தர்மம் அல்லது பொது சமுதாயத்துக்கு கொடுத்த கொடையாக (தானமாக) ஏற்பதில்லை. அதிலும் முத்தவாலி அவரின் விருப்பத்துக்கு அந்த தானத்தை மாற்ற முடியும் என்பதால், இந்த கொடை மூலம் பயனடையும் பயனாளிகள் (Beneficiaries are not general public and not specific in nature) நிலையில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதால், இதை ஒரு பொதுக் கொடை அல்லது வக்ப் என்று ஏற்க முடியாது.

எனவே இந்த வழக்கில், இந்த வக்ப் என்னும் பொதுக்கொடை மூலம் செய்யும் தர்மங்களை ஒரு தர்ம காரியமாக ஏற்க முடியாது என்றும், அதை ஒட்டி அதற்கு வரிச் சலுகை கொடுக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் 1944-ல் தீர்ப்பு சொல்லியுள்ளது.

The Commissioner of Income Tax vs Aga Abbas Ali Shirazi on 28-Jan-1944, (1944 -12 ITR 179 Mad).

**